50,000க்குமேலாக பண பரிவர்த்தனைக்கு பான் கார்டு தேவையில்லை ஆதார் போதும்
ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கு நிரந்தரவருமானவரிகணக்கு (பான்) எண்ணுக்குப்பதிலாக, ஆதார் எண்ணைப்பயன்படுத்தலாம் என்று வருவாய்த் துறைச் செயலர் அஜய் பூஷண் பாண்டே கூறினார். இதுவரை, ரூ.50,000க்கும் அதிகமான ரொக்கப் பரிவர்த்தனைகளில் பான் எண் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும். இதேபோல், ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான அசையா சொத்துகளை வாங்கும்போதும் பான் எண் தெரி விப்பது கட்டாயமாகும்.இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், வரி செலுத்துவோரின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், பான் எண்ணுக்குப்பதிலாக, ஆதார் எண்ணைப்பயன்படுத்தலாம் என்று அறிவித்தார். இதுகுறித்து வருவாய்த் துறைச் செயலர் அஜய் பூஷண் பாண்டே சனிக்கிழமை கூறியதாவது:நாடு முழுவதும் 120 கோடி பேர் ஆதார் அட்டை வைத்துள்ளனர். அவர்களில் 22 கோடி பேர் பான் அட்டை வைத்துள்ளனர். புதிதாக பான் அட்டை வாங்க விண்ணப்பித்தால், முதலில் ஆதார் எண்ணைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே, ஆதார் இருப்பதால், புதிதாக பான் எண் வாங்க வேண்டியதில்லை. பான் எண் கட்டாயம் தேவைப்படும் அனைத்து இடங்களிலும், அதற்குப் பதிலாக, ஆதார் எண்ணைப் பயன்படுத்தலாம் என்றார் அவர். அப்படியெனில் இனி பான் எண் பயன்பாட்டில் இருக்காதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அப்படி எதுவும் நடக்காது; ஏனெனில் மக்கள் தங்கள் விருப்பம்போல், ஆதார் எண்ணையோ, பான் எண்ணையோ பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு ஆதாரை விட பான் எண் பயன்படுத்துவது வசதியாக இருக்கும். எனவே, ஆதாரும், பான் எண்ணும் பயன்பாட்டில் இருக்கும்' என்று அஜய் பூஷண் பாண்டே கூறினார்.