ஜந்தர் மந்தரில் ஒன்று கூடிய காஷ்மீர் மக்கள்
நேற்று (வெள்ளிக்கிழமை) டெல்லி ஜந்தர் மந்தரில் ஜம்மு காஷ்மீரில் சரத்து 370 நீக்கப்பட்டதைக் கண்டித்தும் அங்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகளை எதிர்த்தும் வாயில் கருப்புத்துணி அணிந்து ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதில் டெல்லியில் பணிபுரியும் மற்றும் வசிக்கும் ஜம்மு காஷ்மீரைச் சார்ந்த மக்களும் கலந்து கொண்டனர். அவர்கள் பல்வேறு எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். அவற்றில் "நோ மீன்ஸ் நோ", "கட்டாய கல்யாணம் நீடிக்காது" போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. போராட்டத்தின் நடுவில் ஓர் மாணவி அழுதுகொண்டிருந்தார். அவர், தான் டெல்லியில் ஜாமிய மிலியா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருப்பதாகவும் காஷ்மீரில் இருக்கும் தன் குடும்ப நபர்களிடம் பேசி ஐந்து நாட்கள் ஆகிறது என்றும் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பயமாக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் இந்த செயலால் காஷ்மீர் மக்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, வளர்ச்சிக்கும் சரத்து 370-க்கும் சம்பந்தம் இல்லை. பிகார் போன்ற மாநிலங்கள் முன்னேறாததற்கு என்ன காரணம்? பிகாரில் என்ன 370 உள்ளதா என்றும் வினவினார்.