மத்திய அரசுக்கு ‘ஜால்ரா’ போட்டிருக்காவிட்டால் 11 மருத்துவக் கல்லூரிகள் கிடைத்திருக்காது- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து
மத்திய அரசுக்கு ஜால்ரா போட்டிருக்காவிட்டால் 11 மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரமுடியுமா? என அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கேள்வி எழுப்பினார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது: குடியுரிமைச் சட்டப் பிரச்சினையை எதிர்க்கட்சியான திமுககையில் எடுத்து அதனைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது. எதற்கெடுத்தாலும் இந்த ஆட்சி கவிழ வேண்டும். தூக்கி எறியப்பட்ட வேண்டும் என்றே எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் புலம்பிக் கொண்டிருக்கிறார்.
மத்திய அரசுக்கு ஏன் ஜால்ரா போடுகிறீர்கள் எனக் கேட்கிறார்கள். ஜால்ரா போட்டிருக்காவிட்டால் 11 மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்திருக்க முடியுமா? அதனால் ஜால்ரா போடுவதும் நல்லதுதான். குடியுரிமைச் சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிப்புக்குள்ளானால் அவர்களைக் காப்பாற்ற அதிமுகதான் முதலில் நிற்கும்.
இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார். கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட அதிமுக செயலாளர் மருதராஜ், தேன்மொழி எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.