சித்ரவதைக்கு ஆளான சென்னை மாணவர்
ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர், காரணி போஸ்ட், பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாகூர்பாபு (21). இவர் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் பூந்தமல்லி பகுதியில் உள்ள கல்லூரியில் பயோ மெடிக்கல் 3-ம் ஆண்டு படித்துவருகிறேன். அதே கல்லூரியில் ரம்யா (பெயர் மாற்றம்) 2-ம் ஆண்டு பயோ மெடிக்கல் படித்துவருகிறார். பாடம் தொடர்பாக ரம்யா, என்னிடம் சந்தேகம் கேட்பார். அதனால் நாங்கள் இருவரும் பழகினோம்.
தோழியாகப் பழகிய ரம்யாவுடன் நான் போட்டோ எடுத்துள்ளேன். இந்தச் சமயத்தில் பேட்டையைச் சேர்ந்த அன்பு என்பவர், நான் ரம்யாவிடம் பேசக் கூடாது என்று மிரட்டினார்.
கடந்த 17-ம் தேதி அன்பு மற்றும் அவரின் நண்பர்கள் நான் படிக்கும் கல்லூரிக்கு வந்தனர். பின்னர், அவர்கள் என்னை பைக்கில் அழைத்துக்கொண்டு யாருடைய வீட்டுக்கோ கூட்டிச் சென்றனர்.
அங்கு என்னை அறையில் அடைத்து வைத்து கட்டையால் தாக்கினர். ரம்யாவிடம் ஏன் பேசுகிறாய் என்றும் இனிமேல் பேசினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினர்.
பின்னர், அங்கிருந்து என்னை வெளியில் அனுப்பிவிட்டனர். அப்போது இங்கு நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்றும் கூறினர். அதனால் நான், விடுதிக்குச் சென்றுவிட்டேன்.
எனக்கு ஏற்பட்ட காயங்களைப் பார்த்த உறவினர் ஒருவர், காவல் நிலையத்தில் புகாரளிக்கும்படி கூறினார். அதன்படி அன்பு மற்றும் அவரின் நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகாரளித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மாணவன் அளித்த புகாரின்பேரில் 6 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.இதுகுறித்து நசரத்பேட்டை போலீஸார் கூறுகையில், மாணவன்
அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிந்து விசாரித்துவருகிறோம். மாணவியின் உறவினர்கள்தாம் மாணவனை சித்ரவதை செய்துள்ளனர். அதனால் மாணவியிடமும் விசாரித்த பிறகு, நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.