நியூயார்க் சிறைகளில் 38 பேருக்கு கரோனா தொற்று பரவல்: அமெரிக்காவில் 22 லட்சம் சிறைக்கைதிகள்- கடும் பீதியில் சிறை ஊழியர்கள்
நியூயார்க் நகர சிறைச்சாலைகளில் 38 பேர்களுக்கு கரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பயங்கரமான ரைகர்ஸ் தீவு சிறை வளாகமும் அடங்கும்.
கிரிமினல் ஜஸ்டிஸ் தலைவர்களுக்கு சிறை அதிகாரி ஜாக்குலின் ஷெர்மன் எழுதிய கடிதத்தில் 58 பேர் தற்போது கரோனா தொற்று கண்காணிப்பில் இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கைதிகள் எண்ணிக்கையை குறைக்கவும் சிறைப்பணியாளர்களை குறைக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த 6 நாட்களில் 17 சிறை ஊழியர்கள் 21 கைதிகளுக்கு கரோனா பாசிட்டிவ் என்று கூறியுள்ளார் ஜாக்குலின்.
ஆனால் நியூயார்க் நகர நிர்வாகம் தொடர்ந்து தொற்று எண்ணிக்கையை குறைத்தே கூறிவருகிறது. அமெரிக்காவில் சுமார்22 லட்சம் பேர் சிறையில் இருக்கின்ரனர். உலகில் வேறு எங்கும் சிறைக்கைதிகள் இந்த அளவில் இல்லை. இதனையடுத்து அங்கு பரவினால் என்ன ஆகும் என்ற பீதி ஏற்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்காவில் கோவிட்-19 சோதனை நிலையங்கள் குறைவாகவே உள்ளன அதனால் சிறையில் இருக்கும் ஆண்கள் பெண்கள் அச்சமடைந்துள்ளனர், மேலும் கோவிட் 19 பரிசோதனையில் இவர்கள் கடைசியில்தான் பரிசோதிக்கப்படும் நிலையும் இருந்து வருகிறது.
ஏற்கெனவே கலிபோர்னியா, மிச்சிகன், பென்சில்வேனியா ஆகிய இடங்களில் சிறைகளில் கரோனா பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குணமடைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சாதாரண ஜுரம், இருமல் உள்ளவர்கள் 2 வாரங்களில் தேறி விடுகின்றனர், தீவிர கரோனா நோய் அறிகுறிகள் உள்ளவர்களுகு குணமடைய 3 முதல் 6 வாரங்கள் வரை ஆகின்றன என்று உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.