உடல் வெப்பநிலையைக் குறைத்துக்காட்ட மாத்திரை உண்ட
கொரோனா பரிசோதனையின் போது உடல் வெப்பநிலையை குறைத்து காட்ட சில இளைஞர்கள் மாத்திரை உட்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்தியாவை பொறுத்த வரை கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 370 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
அந்த வகையில் விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அலுவலங்கள் என முக்கிய இடங்கள் அனைத்திலும் பாதுகாப்பு சோதனைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனையின் போது உடல் வெப்பநிலையை குறைத்துக் காட்டுவதற்காக விமான பயணிகள் சிலர் மாத்திரைகளை உட்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனில் இருந்து திரும்பிய நபர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டதால் அவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தன்னுடன் விமானத்தில் வந்த கல்லூரி மாணவர்கள் 10 பேர் கொரோனா பரிசோதனை போது உடல் வெப்பநிலையை குறைத்து காட்டுவதற்காக பாரசிட்டமால் மாத்திரைகளை உட்கொண்டதாக தெரிவித்துள்ளார்.