உ.பி., மாநிலத்தவர்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி
புதுடில்லி: டில்லியில் இருந்து உ.பி.,மாநிலத்திற்கு வந்த மக்களை பத்திரமாக கொண்டுசேர்த்துள்ளார் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் .
நெருக்கடியான காலகட்டங்களில் அதிகாரிகள் எடுக்கும் முடிவுகள் அனைவருக்கும் நன்மை கிடைக்க செய்யும். அது போன்ற செயல் உ.பி., மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தை நிகழ்த்திய ஐ.ஏ.எஸ்.,அதிகாரிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.நாடு முழுவதும் கொரோனா பதற்றம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வாழ்வாதாரங்களை இழந்த பல்வேறு மாநில மக்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு செல்வதற்காக டில்லி பஸ் நிலையத்தில் குவிந்தனர். இதனால் டில்லி பஸ் நிலையம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உ.பி., மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களும் தங்கள் மாநிலத்தை நோக்கி பஸ் பயணம் மேற்கொள்ள வந்தனர்.
அவர்கள் அனைவரும் காசியாபாத் நகருக்கு வந்தனர். அவர்கள் அனைவரையும், லக்னோவில் மாநில அரசின் போக்குவரத்து பணியாற்றும் ராஜசேகர் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருங்கிணைத்தார்.
தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பஸ் டிரைவர்களை உடனடியாக பஸ்சுடன் காசியாபாத்திற்கு வரும் படி தொலைபேசி மூலம் தகவல் அளித்தார். இதனையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் காசியாபாத்திற்கு விரைந்தன.
தொடர்ந்து மக்கள் அனைவரும் அவர்களின் சொந்த ஊருக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப் பட்டனர்.
முன்னதாக பிராந்திய மேலாளர் ஏ.கே.சிங் கூறுகையில் எம்.டி.,ராஜசேகர் சூழ்நிலையை நன்றாக கையாளுகிறார். அவர் பிரச்னைகளை தீர்ப்பதில் உடனடி ஆர்வம் காட்டுகிறார். என்று கூறினார்.
சனிக்கிழமையன்று உ.பி., மாநில மக்கள் அனைவரும் பாதுகாப்பாக தங்களின் சொந்த ஊருக்கு சென்ற சேர்ந்தனர் என்பதில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜசேகரின் பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.