லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர், 'சஸ்பெண்ட்'
சாலை விபத்தில் சிக்கிய காரை விடுவிக்க, லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் அபிஷேக்மாறன், 35. இவர், கடந்த மாதம், 15ம் தேதி, கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில், 'இன்னோவா' காரில் சென்று கொண்டிருந்தார்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியைச் சேர்ந்த ராஜசேகர், 28, என்பவர், காரை ஓட்டினார். அந்த வழியாகச் சென்ற, 'ஆல்டோ' கார் மீது, 'இன்னோவா' கார் மோதியது.
இதில், 'ஆல்டோ' காரில் பயணித்த பெண் உயிரிழந்தார்.வழக்குப் பதிவு செய்த, வேலாயுதம்பாளையம் போலீசார், 'இன்னோவா' காரை பறிமுதல் செய்தனர்.
அந்த காரை விடுவிக்க, இன்ஸ்பெக்டர் வேலுசாமி, 50, தனக்கு, 10 ஆயிரம் ரூபாயும், தலைமை காவலர் செந்தில்குமார், 45, என்பவர், 5,000 ரூபாயும் கேட்டனர்.
இது குறித்து அபிஷேக்மாறன், கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார், கடந்த மாதம், 26ம் தேதி, செந்தில்குமாரை, கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அன்று, வேறு அலுவல் பணிக்காக, இன்ஸ்பெக்டர் வேலுசாமி சென்றதால், கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார்.
ஆனால், செந்தில்குமாரின் வாக்குமூலம் மற்றும் அபிஷேக்மாறன் கொடுத்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டர் வேலுசாமி மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து, திருச்சி, டி.ஐ.ஜி., பாலகிருஷ்ணன், நேற்று முன்தினம் இரவு, இன்ஸ்பெக்டர் வேலுசாமியை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.