பெண் காவலர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ‘கொரோனா விழிப்புணர்வு கீதம்’
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் பெண் காவலர்களை கவுரவிக்கும் "கொரோனா விழிப்புணர்வு கீதம்" பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர வீட்டை விட்டு வெளியே வர அரசு தடை விதித்துள்ளது. ஆனால் உத்தரவை மீறி பல்வேறு பொதுமக்கள் வெளியே சுற்றி வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள் வெளியே வராமல் தடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக கடும் வெயிலிலும் பெண் காவலர்கள் சாலைகளிலும், ரோந்து பணியிலும், மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பெண் காவலர்களை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக "கொரோனா விழிப்புணர்வு கீதம்" என்ற பாடலை சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் இன்று வெளியிட்டார்.
இந்த குறும்படத்தினை காவல் ஆணையர் ஆலோசனையின் படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை துணை ஆணையர் ஜெயலட்சுமி மேற்பார்வையில், தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது.
இன்சமாம் அல் ஹக் எழுதிய இப்பாடலுக்கு இசையமைப்பாளர் சி.சத்யா இசையமைத்துள்ளார். பிரியா ஹிமேஷ், மாளவிகா ராஜேஷ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.