ஈரான் நாட்டு கப்பலால் கொரோனா அபாயம்.. உடனே அப்புறப்படுத்த கோரிக்கை..!
புதுச்சேரி: காரைக்கால் துறைமுகத்திற்கு வந்துள்ள ஈரான் நாட்டு கப்பல் மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால், கப்பலை திருப்பி அனுப்ப வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கோரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,637ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸால் 38 உயரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஈரான் நாட்டிலிருந்து புதுச்சேரி மாநிலம் காரைக்கால் துறைமுகத்திற்கு சரக்கு கப்பல் ஒன்று வந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் நாட்டு கப்பலால், கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பிருப்பதால், அந்த கப்பலை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டுமென அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன், உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தடுப்பு விஷயத்தில், புதுச்சேரி காங்கிரஸ் அரசு வழக்கம்போல் மலிவு விளம்பர செயல்களில் ஈடுப்படுத்தி கொண்டு, மக்கள் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை விஷயங்களை கூட சரிவர செயல்படுத்தவில்லை.
அரசின் பொறுப்பற்ற செயலால் மாநிலத்தில் சமூக இடைவெளி நோக்கம் நிறைவேற்றப்படவில்லை. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் இன்றுவரை கண்டறியப்படவில்லை.
வடமாநிலங்களில் இருந்து தொழில்புரிய புதுச்சேரி வந்தவர்கள், அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்படவில்லை. மத்திய அரசுக்கு சொந்தமான ரயில், விமானம், கப்பல் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு, கொரோனா நோய் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்ட ஈரான் நாட்டில் இருந்து ஜிப்சம் மூலப்பொருள் ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று 30 ஊழியர்களுடன் வந்துள்ளது.
அதில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று இருக்கிறது என்பதும், கப்பலில் உள்ள மூலப்பொருளில் எவ்வளவு கொரோனா தொற்று கிருமி பரவியுள்ளது என தெரியாது.
இதைப்பற்றி புதுச்சேரி அரசு அறிந்து கொள்ளவில்லை. இந்நிலையில் அந்த கப்பலில் கொண்டுவரப்பட்ட ஜிப்சம், துறைமுகத்தில் இறக்கினால் அதன் மூலம் கொரோனா தொற்று நோய் பரவினால், காரைக்கால் மட்டும் இன்றி, தமிழகப்பகுதியான நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலுார் மாவட்ட மக்களுக்கும் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே காரைக்கால் துறைமுகத்திற்கு வந்துள்ள ஈரான் நாட்டு கப்பலை, உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும். இதில் சிறு சமரத்திற்கும் ஆட்சியாளர்கள் இடமளிக்க கூடாது.
மக்கள் உயிர் பிரச்னையில் கவர்னர் நேரடியாக தலையிட்டு, ஈரான் நாட்டு கப்பலில் இருந்து எந்த பொருளையும் காரைக்கால் துறைமுகத்தில் இறக்க அனுமதிக்க கூடாது. கப்பலை உடனடியாக திருப்பி அனுப்ப மத்திய அரசை கவர்னர் வற்புறுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.