இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கப்பட்டு இளைஞர் உயிரிழப்பு.. இருசக்கர வாகனத்துக்காக கொலையா...
காஞ்சிபுரம் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் 21 வயது மகன், மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது விலை உயர்ந்த பைக்கையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர், கொலையின் பின்னணி என்ன?
உறவினர் வீட்டுக் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர், மர்ம நபர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்தவர்கள் யார்? நோக்கம் என்ன?
காஞ்சிபுரம் மாவட்டம் சிறு காவேரிபாக்கம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் 21 வயதான எலிசா. இவரது தந்தை ரவிசாம்சன் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஆவார். எலிசா, பிளஸ் 2 முடித்து விட்டு சர்ச்சுகளில் பாடல் பாடும் பாடகராக இருந்து வந்தார். கொரோனா முடிந்தபின் கல்லூரியில் சேர்ந்து படிக்க தயாராக இருந்தார்.
சனிக்கிழமை அன்று செம்பரம்பாக்கத்தில் உறவினர் வீட்டு குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்காக தனது பல்சர் வாகனத்தில் சென்றார் எலிசா. பிறந்தநாள் விழாவை முடித்து விட்டு சனிக்கிழமை இரவு 12 மணியளவில், சிறுகாவேரப்பாக்கம் பிடிஓ அலுவலகத்தின் பின்புறம் உள்ள சாலை வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை 3 மர்ம நபர் வழிமறித்து இரும்புக் கம்பியால் சரமாரியாகத் தாக்கிக் கொலை செய்துவிட்டு அவரது பல்சர் வாகனத்தையும் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளனர்.
தகவல் அறிந்த பாலுசெட்டி சத்திரம் போலீசார், சடலத்தை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் எலிசா அனைவரிடமும் நன்றாக பழகக் கூடியவர் என்பதும், யாரிடமும் வம்பு தும்புக்குப் போகாத அவர் மது அருந்துவது உள்ளிட்ட பழக்கவழக்கங்கள் இல்லாதவர் என்பதும் தெரியவந்துள்ளது.