கட்டுமான நிறுவனரும், திரைப்பட தயாரிப்பாளருமான வருண் மணியன் மீது பண மோசடி உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
கட்டுமான நிறுவன உரிமையாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான வருண் மணியன் மீது பண மோசடி உட்பட 3 பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
த்ரிஷா, பிந்துமாதவி உட்பட நடிகைகள் பலருடன் காதல், நிச்சயதார்த்தம் என சர்ச்சைகளில் சிக்கியவர் வருண்மணியன்.
இந்த நிலையில், அயனம்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தையூரில் உள்ள வருண் மணியனின் ரேடியன்ஸ் கட்டுமான நிறுவனத்தில் 4 லட்சம் ரூபாய் கொடுத்து 2 வீடுகளை முன்பதிவு செய்தார் என்று கூறப்படுகிறது.
நீண்ட நாட்கள் ஆகியும் வீட்டுமனையையும் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் வருண் மணியன் கொலை மிரட்டல் விடுத்ததாக வெங்கடேசன் கிண்டி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
புகார் தொடர்பாக விசாரணை செய்ய வருண் மணியனின் அலுவலகத்துக்கு போலீசார் சென்றதாகவும் அந்த ஆத்திரத்தில் வருண் மணியன் காவல் நிலையம் வந்து மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.