அரசு பேருந்துக்குள் புகுந்த மழைநீர்.. குடைபிடித்துக்கொண்டு பேருந்தை இயக்கிய ட்ரைவர்.. குடையுடன் பயணித்த பயணிகள்..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து பசுவந்தனை அருகேயுள்ள கப்பிகுளத்திற்கு சென்ற அரசு பஸ்சின் மேற்கூரை பகுதியில் ஆங்கங்கே ஓட்டை இருந்தது. அதனால் மழை பெய்த போது மழை நீர் பஸ்க்குள் விழுந்ததால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். சில பயணிகள் குடையுடன் பஸ்சில் பயணித்தது மட்டுமின்றி, அரசு பஸ்சினை இயக்கிய டிரைவரும் ஒரு கையில் குடையை பிடித்துக் கொண்டு இயக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து பசுவந்தனை அருகேயுள்ள கப்பிகுளத்தில அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இன்று வழக்கம் போல கப்பிகுளம் செல்லும் அரசு பஸ் பயணிகளை ஏற்றிகொண்டு சென்றது. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு மழை பெய்தது. கப்பிகுளம் சென்ற அரசு பஸ்சின் மேற்கூரையில் ஆங்கங்கே லேசான ஓட்டைகள் இருந்த காரணத்தினால் மழை நீர் பேருந்துக்குள் விழுந்தது.
இதனால் பஸ் முழுவதும் ஈராமாக சேறும், சகதியுமாக காட்சியளித்தது. அதனால் சில பயணிகள் பேருந்தில் குடையுடன் பயணித்தனர். மேலும் டிரைவர் இருக்கை பகுதியிலும் அதிகமான மழை நீர் உள்ளே வந்து கொண்டு இருந்தது. அதனால் டிரைவரும் வேறு வழியில்லமால் ஒரு கையில் குடையை பிடித்தவாறு பேருந்தை இயக்கியுள்ளார்.