ஸ்ரீபெரும்புதூர் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் நிவாரணம்: முதல்வர்
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ராம்பாக்கம் தனியார் உணவு தயாரிப்பு தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 குடும்பத்தினருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் வழங்க காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ராம்பாக்கம் பகுதியில் தனியார் உணவு தயாரிப்பு நிலையத்தில், இன்று காலையில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியின்போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் இச்சம்பவத்தில் பாக்கியராஜ் , முருகன் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.
மேலும் உயிரிழந்த 3 நபர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்க காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது