அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உறவினர் வீட்டில் அதிரடி ரெய்டு: திண்டிவனத்தில் பரபரப்பு
திண்டிவனம்: திண்டிவனத்தில் அரசு ஒப்பந்ததாரரும், அதிமுக பிரமுகருமான குமார் என்பவர், பூந்தோட்டம் பகுதியில் வசித்து வருகிறார். அவருக்கு அப்பகுதியில் அலுவலகமும் உள்ளது. இவர் விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணித்துறை டெண்டர்கள் எடுத்து பணிகளை செய்து வருகிறார்.
மேலும் இவருக்கு திண்டிவனம் அருகே எம்.சாண்ட் குவாரியும் உள்ளது. இவர் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தின் உறவினர். குமார் மனைவி கல்யாணி, முன்னாள் நகராட்சி கவுன்சிலர்.
இந்நிலையில், நேற்று காலை மேரி தலைமையிலான 5 பேர் கொண்ட ஜிஎஸ்டி அதிகாரிகள் குழு திண்டிவனத்தில் உள்ள குமாரின் அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின்போது 2017- 18ம் ஆண்டில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது. இந்த சோதனை திண்டிவனத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.