இரு சமூகத்தினரிடையே மோதல் : சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பத்திரிகையாளர் மீது தாக்குதல்.. பரபரப்பு!!
திருப்பூர் : தாராபுரத்தில் கோட்டைமேடு பகுதியில் இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டு போலீசார் உட்பட 3 பத்திரிகையாளர்கள் காயம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பழையகோட்டை மேட்டு தெருவில் இரு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு அதில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த 100 பேர்கள் மது அருந்திவிட்டு காலி மது பாட்டில்களை கையில் எடுத்துக்கொண்டு அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தினர் மீது வீசி தாக்கியுள்ளனர்.
பின்பு அங்கிருந்த சிறுமிகளிடம் அநாகரீகமான முறையில் நடக்க முயற்சி செய்துள்ளனர். அதே நேரத்தில் அப்பகுதியில் இருந்த பெண்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
இதைக்கண்ட மற்றொரு சமூகத்தினர் ஆத்திரமடைந்து தாக்க முயன்றபோது இரு தரப்பினரிடையே கல்வீச்சு தடியடி சம்பவம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அதன் பேரில் 3 போலீசார் மட்டும் கோட்டைமேடு பகுதிக்கு அனுப்பியுள்ளனர்.
ஆனால் அவர்கள் போலீசாரையும் பீர் பாட்டிலை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் ஏட்டு காளிமுத்து என்பவர் நெஞ்சில் பீர் பாட்டில் பட்டு உடைந்தது. அதே சமயத்தில் பத்திரிக்கையாளர் செய்தி சேகரிப்பதற்காக சென்றபோது மது அருந்தி இருந்த ஒரு கும்பல் செய்தியாளர்களை உருட்டுக்கட்டையால் தாக்கியதில் 3 தொலைக்காட்சி ஊடகத்தை சேர்ந்த செய்தியாளர்கள் காயமடைந்தனர்.
போலீசாருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லாததால் தாராபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் தனராசுவிடம் பத்திரிக்கையாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் புகார் தெரிவித்தனர்.